தலவரலாறு: அமெரிக்காவின் நிபிரஸ்கா பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் இந்திய மற்றும் நேபாளியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டதாகும். 1970களின் முற்பகுதியில் இந்தியா வம்சாவழியினரான பொறியாளர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் ஒமஹா பகுதியில் குடியேறினர். துவக்கத்தில் இவர்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி வந்தனர். 1970களின் மத்தியில் இந்திய வம்சாவழியினரில் மேலும் பலர் லின்கோல் மற்றும் ஒமஹா பகுதிகளில் குடியேறினர். இவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவர்களாக இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்து மதத்தினர் இப்பகுதியில் அதிகளவில் வேலையில் இருந்ததுடன், அதிகளவில் குடியேறவும் துவங்கினர். 1990களின் முன் பகுதியில் நகரின் மத்திய பகுதியில் இந்து சமுதாயத்தினருக்கென வழிபாட்டுத்தலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதுள்ள வழிபாட்டுத்தல கட்டிடம் வாங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக கோயில் பணிக்கான நிதி சேகரிக்கப்பட்டு, ஒமஹா இந்து கோயில் 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி நிறைவு பெற்றது. இப்பகுதியில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினரில் 98 சதவீதம் பேர் இந்தியர்களாகவும், மீதமுள்ள 2 சதவீதம் பேர் நேபாளிகளாகவும் இருந்தனர்.
இக்கோயிலின் வெளிப்புறம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாகும். ஒரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாரம்பரிய முறையிலான இந்துக் கோயிலும், மற்றொரு புறம் கோயிலின் கலாச்சார மையம் மற்றும் நூலகம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. கலாச்சார மையத்திற்கு அருகில் மடப்பள்ளி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதலில் வாங்கப்பட்ட கட்டிடத்தில் பல்வேறு உணவுவிடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் சமூகக்கூடம் இப்பகுதியில் உள்ள இந்திய சங்கத்தினரால் பயன்படுத்தப்படுவதுடன், பொதுமக்களின் தனிப்பட்ட விசேஷங்களுக்காகவும் வாடகைக்கு விடப்படுகிறது. இக்கோயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் 6 முதல் 12 வயதுடைய மாணவர்களுக்கான ஞாயிறு வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. புதன்கிழமைகளில் மாலை 6.15 முதல் 7.45 வரை குண்டலினி யோக வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இது தவிர சமூகக் கூடத்தில் பேச்சாளர்கள், இசை கலைஞர்கள் போன்றவர்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுடன் கூடுதலாக கோயில் சார்பில் தீபம் செய்தித்தாள் 4 முதல் 6 முறை வெளியிடப்படுகிறது. இந்து மத கலாச்சார நிகழ்வுகளுடன் பல்வேறு சமூக சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன. சுகாதார கூட்டம், எய்ட்ஸ் பாதுகாப்புக் கழகம் போன்ற கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நிகழ்ந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்வாக உறுப்பினர்கள் ஒன்று கூடி 48 மணிநேரம் தொடர்ச்சியாக பிரார்த்தனை நடத்தினர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக 35 ஆயிரம் டாலர் நிவாரண நிதி உதவியும் அளிக்கப்பட்டது.
கோயில் நேரங்கள்: வார நாட்கள் : காலை 10.00 – பகல் 1.00 ; மாலை 5.30 – இரவு 8.30 ; வாரத்தின் இறுதி நாட்கள்: சனிக்கிழமை: காலை 9.00 – பகல் 1.00; மாலை 5.30 – இரவு 8.30; ஞாயிற்றுக்கிழமை: காலை 10.00 – பகல் 2.00 ; மாலை 5.30 – இரவு 8.30
துசி குமாரசாமி
வவுனியா

