வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 6,000 கோடிக்கு (1.2 பில்லியன் டாலர்) சமூக வலைத்தளமான யாமர் நிறுவனத்தை வாங்கவுள்ளது. இதன்மூலம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள சேவையை மைக்ரோசாப்ட் வழங்க முடியும். வெளியுலகில் மட்டுமின்றி நிறுவனங்களுக்குள்ளான சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானது யாமர். ஒரு நிறுவனம் தனது பணியாளர்களை மட்டும் கொண்ட சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொள்ள யாமர் உதவுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட யாமர் வலைத்தளத்தை 50 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையகமாகக் கொண்ட யாமர் நிறுவனத்தில் 400 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கினாலும் அதன் தலைமை செயல் அதிகாரியாக கர்ட் டெல்பென் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்பு பேபால் நிறுவன அதிகாரியாக இருந்தவர் ஆவார்.மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது ஷேர் பாயிண்ட் என்ற அப்ளிகேஷனை வழங்கி வருகிறது. இது நிறுவனங்களுக்குள் சமூக வலைத்தளத்தை உருவாக்க உதவும் அப்ளிகேஷனாகும். ஆனால், இதில் யாமர் அளவுக்கு வசதிகள் இல்லை. பேஸ்புக் போல யாமர் விளம்பரங்களை நம்பியில்லை. கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் இணையத்தளமாகும். ஒவ்வொரு யாமர் பயனீட்டாளருக்கும் 240 டாலர் என்று கணக்கிட்டு 50 லட்சம் பேருக்கு ரூ. 6,000 கோடியைத் தந்து இதை வாங்கவுள்ளது மைக்ரோசாப்ட். கடந்த ஆண்டு ஆன்லைன் சேட் நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் ரூ. 42,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் வாங்கியது. தனது அடுத்த ஆபிஸ் வெர்சனில் ஸ்கைப்பை சேர்க்கவுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் இமெயில், எக்ஸெல் ஸ்பிரட் ஷீட்கள், பவர் பாயிண்ட் உள்ளிட்ட எம்எஸ் ஆபிஸ் சேவைகள் மூலம் அந்த நிறுவனத்துக்கு 60 சதவீத லாபம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
