யாழ். போதனா வைத்தியாலை வைத்தியர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெரேரா தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று (16) சனிக்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் காரணமாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யாழ். குடாநாட்டில் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒரு குழுவினரைத் தேடி விசேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் விசேட கனவம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களைப் பாதுகாத்து மக்களின் அமைதியான வாழ்வுக்கு யாழ்.பொலிஸார் தங்களது கடமையைச் செய்வர் எனவும் யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெரேரா தெரிவித்தார்.